ஜெயாவை விடுதலை செய்யக்கோரி 2000 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

ஜெயாவை விடுதலை செய்யக்கோரி 2000 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சுமார் 2ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தினர்.
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைச் செய்யக் கோரியும், அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும் தமிழகமெங்கும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி வரும் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் முகாம் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள்.
 
இந்த உண்ணாவிரதத்தில் கும்மிடிப்பூண்டி, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 948 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2000பேர் கலந்துக் கொண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இலங்கை அகதிகள் முகாம் தலைவர் கணேசன், துணை தலைவர் வேதநாயகம், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் நாதன் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கோபால்நாயுடு, நகர செயலாளர் மு.க.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.