காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த கூகுள் தேடல்

குடியா என்ற பெண் பீகாரில் ரயிலில் காணாமல் போன போது ஆறு வயதாக இருந்தார். தற்போது 23 வயதான குடியா, அஸ்ஸாமில் உள்ள குவஹாத்தியில் கடந்த வாரம், அவரது பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளார். அதற்காக அவர், அரசாங்க அதிகாரிக்கும் மற்றும் கூகுள் தேடலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 
 
'17 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாட்னாவில் இருந்து  குவஹாத்திக்கு ரயிலில் தனது மாமாவுடன் பயணம் சென்றிருந்தார். அப்போது, அவரது மாமா சாப்பாடு வாங்குவதற்காக ஒரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார், ஆனால் அவரால் சரியான நேரத்திற்குள் அந்த ரயிலை பிடிக்க முடியவில்லை. குடியா, குவஹாத்தி ரயிலில் தனியாக இருப்பதை ரயில்வே அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்கள் விசாரித்த போது, அவளால் தான் யார் என்று கூற முடியவில்லை' என்று குடியாவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
 
பின்பு அவள் குவஹாத்தியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அங்கேயே வளர்ந்தாள். குடியாவின் பெற்றோரை பற்றி கேட்டபோது, 'தனது மாமா பாட்னாவில் தன்னுடைய வீட்டிற்கு முன் உள்ள ரயில்வே கிராசிங்க்கு அருகில் இருக்கும் பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்' என்பது மட்டுமே நினைவில் உள்ளதாக கூறியுள்ளார். 
 
அசாம் மாநிலத்தில் குழந்தை பாதுகாப்பு சமூகத்தின் அதிகாரியான நீலாக்ஷீ சர்மா, குடியாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முடிவு எடுத்து முயற்சி செய்தார். ஆனால், அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.   
 
பின்னர் திருமதி சர்மா கூகுள் தேடலை நாடினார். ' நான் மணிக்கணக்காக கூகுளை தேடிப்பார்த்தபோது, ஒரு நாள் பாட்னாவில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையின் போன் நம்பர் எனக்கு கிடைத்தது, அதன் மூலமாக குடியாவின் மாமா மற்றும் பெற்றோரையும் கண்டுபிடிக்க முடிந்தது ' என்று திருமதி சர்மா கூறியுள்ளார். 
 
குடியா காணாமல் போனது போது அவருக்கு இந்தி மட்டும் பேச தெரியும், ஆனால் தற்போது அவருக்கு அஸ்ஸாமி மட்டுமே பேச தெரிகிறது.