கத்தி: முதல் நாள் வசூல் ரூ.23.80 கோடி - தென்னிந்திய சாதனை தகர்ப்பு! ஏ.ஆர். முருகதாஸ்

கத்தி: முதல் நாள் வசூல் ரூ.23.80 கோடி - தென்னிந்திய சாதனை தகர்ப்பு! ஏ.ஆர். முருகதாஸ்
தென் இந்திய மொழி படங்களின் அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் முறியடித்து கத்தி மொத்தம் ரூ.23.80 கோடி வசூலித்துள்ளது என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
 
விஜய், சமந்தா முன்னணி வேடங்களில் நடிக்க, அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் வெளியான திரைப்படம் கத்தி. இதன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது டிவிட்டர் தளத்தில் கத்தியின் முதல் நாள் வருவாய் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது: 
 
தென் இந்திய மொழி திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை கத்தி முறியடித்துள்ளது. இதன்படி மொத்தம், 23.80 கோடியை முதல் நாளில் கத்தி வசூலித்துள்ளது. 
 
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலுள்ள தியேட்டர்களின் வசூல் ரூ.16 கோடியே 45 லட்சமாகும். வெளிநாடுகளில் வசூலான தொகை ரூ.7.35 கோடி. இவ்வாறு முருகதாஸ் தெரிவித்துள்ளார். 
 
இதே டிரண்ட் நீடித்தால் கத்தி மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். 
 
முன்னதாக தீபாவளி நாளில் இந்தப் படம் ரூ. 12.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், அதைவிட இரண்டு மடங்கு வசூலாகியுள்ளதாக முருகதாஸ் கூறியுள்ளார்.