உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல- விஜய்

உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல- விஜய்
கத்தி பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் இறந்ததற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
கத்தி படம் ரிலீஸானதையொட்டி விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களை அமளி துமளியாக்கி விட்டனர். தீபாவளியன்று இப்படம் வெளியானது. கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட சடங்குகளை அவர்கள் நடத்தி படத்தை வரவேற்றனர்.
 
கேரளாவில் உள்ள வடக்கன்சேரி என்ற இடத்தில் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும்போது உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்தார். தீபாவளி அன்று மதியம் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றது.
 
இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் மறைவுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
வடக்கன்சேரியில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணனின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நம் ப்ரியமானவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். தங்களது உயிர்க்கும், மற்றவர்களது உயிர்க்கும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் பண்டிகை காலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உங்களது ஆதரவை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
 
தயவு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். இல்லையேல் இதுபோன்ற அசம்பாவிதங்களையும், தாங்க முடியாத வலிகளையும் சந்திக்க நேரிடும். உங்களை நீங்கள் மதிப்பதே, என்னை நீங்கள் மதிப்பதற்கான அடையாளம் என்று தெரிவித்துள்ளார் விஜய்.