அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக படகுகளில் வரும் சட்ட விரோத குடியேற்றவாசிகளை கம்போடியாவில் மீளக்குடியமர்த்துவது குறித்து அந்நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் கூறினார்.
இதன் பிரகாரம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருபவர்களின் ஒரே தெரிவு கம்போடியாவுக்கு சென்று அங்கு குடியமர்வதாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் மேற்படி உடன்படிக்கைக்கு மனித உரிமைகள் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அகதிகளை கையாளுவதற்கான போதிய வசதிகளற்ற நாடொன்றுக்கு அவர்களை அனுப்பி தனது அகதிகள் தொடர்பான சர்வதேச கடப்பாட்டை அவுஸ்திரேலியா தவறியுள்ளதாக அந்த குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய கொள்கைகளின் பிரகாரம் படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அவர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்.
இதுதொடர்பில் கம்போடியாவின் குடிவரவு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சோக்பால் விபரிக்கையில்;
தமது நாட்டில் குடியமர்த்தப்படும் அகதிகள் தமது நாட்டின் சமூகத்தினருடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்படுவார்கள் என தெரிவித்தார். கம்போடிய தலைநகர் மற்றும் தென்மேற்கு மாகாணமான பிரெஹ் சிஹனனோயக் ஆகிய நகர்களிலேயே அகதிகள் மீளக்குடியமர்த்தப்படலாம் என நம்பப்படுகின்ற நிலையில் அந்த பிராந்தியங்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் விஜயம் செய்ததாக கூறப்படுகிறது. கம்போடியாவானது கடந்த காலங்களில் அகதிகளையும் புகலிடக்கோரிகையாளர்களையும் பாதுகாக்கத்தவறிய ஒரு நாடாக இருந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அகதிகள் செயற்பாட்டு கூட்டமைப்பின்பேச்சாளர் அயன் றின்டோல் விபரிக்கையில்;
கம்போடியா ஊழல் மிக்க வறுமையான நாடு எனவும் அது தனது சொந்த பிரஜைகளை கவனித்துக்கொள்ளவே திண்டாடி வருவதாக கூறினார். இந்நிலையில் இந்த கம்போடிய உடன்படிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மேற்படி அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை சிட்னி நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.